அத்தியாயம் 1

அத்தியாயம் 1: அருட்பிரகாச வள்ளலார்

வள்ளலார் என்று உலகோரால் போற்றப்படும் இராமலிங்க அடிகள் (1823-1874), எல்லையில்லாக் கருணையை உலகிற்குப் போதித்து, கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதியாய் தனிப்பெரும் கருணையாய் இருப்பவர் என்று இயற்கை உண்மை கடவுளாகிய “அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை” இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் அருளாளர். உலகம் மனித நேயத்தை மட்டுமே பேசிக்கொண்டிருந்த காலத்தில், ‘ஆன்ம நேயத்தை’ (சகல ஜீவராசிகளையும் தன்னுயிர் போலப் பார்க்கும் நிலை) உலகுக்கு போதித்தவர் வள்ளல் பெருமான். "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்" என்பதே அவரது ஒரே மூச்சாக இருந்தது. “என் உயிர்தான் உயிர்இரக் கந்தான் ஒன்றதே இரண்டிலே இரக்கம் ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத் தொருவனே நின்பதத் தாணே” — வள்ளலார் இப்படி உயிர் இரக்கமும் அவரும் வேறில்லை என்று, இரக்கம் நீங்கினால் தன் உயிர் நீங்கிடும் என்று ஈடில்லா உயிர் இரக்கத்தின் கருணையே வடிவாய் இருந்தவர் வள்ளல் பெருமான். அனைத்து உயிர்களிலும் உறையும் அருள் ஒளியான அருட்பெருஞ்ஜோதியை வழிபட, 'சுத்த சன்மார்க்கம்' என்னும் தூய நெறியை உலகுக்கு வழங்கினார். 'திருவருட்பா' எனத் தொகுக்கப்பட்ட அவரது பாடல்கள், மனித குலத்தை அன்பு, தயவு மற்றும் அறவாழ்வுக்கு அழைக்கின்றன. "உயிர்களிடம் காட்டும் கருணையே (ஜீவகாருண்யமே) உண்மையான இறைவழிபாடு" என முழங்கியவர் நம் வள்ளல் பெருமான். இப்படி எல்லையில்லா உயிர் இரக்கத்தின் மூலமாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பரிபூரணமாகப் பெற்று, 1874 ஜனவரி 30 அன்று, மேட்டுக்குப்பத்தில் உள்ள தனது 'சித்தி வளாக' அறைக்குள் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார். தன் உடலை ஒளி தேகமாக (ஒளி உடம்பாக) மாற்றி அருட்பெருஞ்ஜோதியாகவே கலந்தவர் வள்ளல் பெருமான் எனும் மாபெரும் அருட்சித்தர்.

அத்தியாயம் 2

அத்தியாயம் 2: வடலூரைப் பற்றியும் சத்திய ஞான சபை பற்றியும் வள்ளலார் தெரிவிப்பது

"உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை விளக்க நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!" — வள்ளலார் மேலே உரைநடை பகுதியில் வள்ளலார் குறிப்பிட்டவாறு பார்வதிபுரம், வடலூர் என்ற உலகியல் பெயர்களைத் தாண்டி, கடவுள் அருளால் "உத்தர ஞான சித்திபுரம்", "உத்தர ஞான சிதம்பரம்" என்று பெயரிடப்பட்ட தெய்வீகத் திருத்தலம் வடலூர் ஆகும். வடலூர் என்பது பூமியில் உள்ள வெறும் ஒரு நிலப்பரப்பு அல்ல; எவ்வுயிரும் இன்புற்று வாழ, எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 'சிவானந்த சத்திய ஞான சபையில்' திருநடனம் புரியும் தனித்தன்மை வாய்ந்த இடமிது. அசரீரி வாக்கு: அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளல் பெருமானுக்குள் அசரீரியாக (உள்நின்று) உணர்த்தி, சத்திய ஞானசபையை இங்குதான் அமைக்க வேண்டும் என்று கட்டளையிட்ட சிறப்புப் பெற்றது இவ்விடம். இப்பேற்பட்ட புண்ணிய பூமியாகிய வடலூரில் வள்ளலார்: 1. ஏழையின் பசிப்பிணியைப் போக்கும் ஜீவகாருண்யமே உண்மை கடவுள் வழிபாடு என்பதை உலகிற்கு உணர்த்த சத்திய தர்மசாலையையும், 2. உண்மை கடவுள் ஒருவரே, அவர் உருவமற்றவர், தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சொரூபமானவர் என்பதை உலகிற்கு உணர்த்த, ஜோதி வழிபாட்டுத் தலமாகிய சத்திய ஞான சபையையும் நிறுவினார்.

அத்தியாயம் 3

அத்தியாயம் 3: ஏன் வடலூரைப் புனித நகரமாக அறிவிக்க வேண்டும்?

வளமிக்க வடலூரைத் திருவருட்பிரகாச வள்ளல் பெருமான், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால், அருட்பெருஞ்ஜோதி நகராகத் தேர்ந்தெடுத்தார். “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” என்று உலகிற்குப் பறைசாற்றிய வள்ளலார், கருணை வடிவாகத் திகழ்ந்தவர். இவருடைய கருணை உள்ளம், புண்ணிய பூமியான வடலூரில், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால், சத்திய ஞான சபையை நிறுவி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வழிவகுத்தது. இதுவே, புனித நகரமாக அறிவிக்கப்பட வேண்டியதற்கான அடிப்படைத் தகுதியாகும். 1867-ல் வள்ளலாரால் தொடங்கப்பட்ட ‘சத்திய தருமச்சாலையில்’ மூட்டப்பட்ட அடுப்பு, 150 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் ஏழைகளின் பசியைப் போக்கி வருகிறது. வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல், வடலூரின் சிறப்பினைப் பறைசாற்றுகிறது. வடலூரில் அமைந்திருக்கும் ஆன்மீக வரலாற்றுச் சிறப்புமிக்க புண்ணியத் தலங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்புமிக்க மண்ணின் புனிதம் காக்க, இங்கு எந்த உயிரும் கொல்லப்படக் கூடாது; மது, மாமிசம், போதை போன்ற எந்தவொரு தீய பழக்கமும் நுழையக் கூடாது. சாதி, மத, சமய வேறுபாடுகள் அற்ற ஒரு சமத்துவப் பூங்காவாக வடலூர் அங்கீகரிக்கப்படும்போது, இங்கிருந்து தொடங்கும் இந்த அன்பின் அதிர்வுகள், அண்டசராசரங்கள் முழுவதற்கும் தனிப்பெருங்கருணையைக் கொண்டு சேர்க்கும் மாபெரும் புரட்சியின் தொடக்கமாக அமையும். 🛡️ ஒரு மாபெரும் அன்பின் புரட்சி! வருங்காலத் தலைமுறையினருக்கு உயிரிரக்கத்தைக் கொண்டு சேர்க்கவும், வடலூரை அரசாங்கம் 'புனித நகரமாக' அறிவிக்க வேண்டும். வடலூரை அரசாங்கம் 'புனித நகரமாக' அறிவிப்பதன் மூலம், அந்த எல்லையில் எந்தவொரு மாமிசக் கடைகளோ, மதுபானக் கடைகளோ வருவது நிரந்தரமாகத் தடுக்கப்படும். நீங்களோ, நாமோ இங்கே இடும் ஒவ்வொரு கையெழுத்தும் வெறும் மென்பொருள் மையால் ஆனதல்ல; அது வலியில் கதறும் உயிர்களைக் காப்பாற்றும் கருணைக் கரம்! உங்கள் ஒரு கையெழுத்தால் பல வாயில்லா ஜீவன்கள் கொலையிலிருந்து தப்பிக்கின்றன; அவற்றின் வேதனைகள் துடைக்கப்படுகின்றன. அந்த உயிர்கள் அடையும் விடுதலையும், ஆனந்தமும் உங்கள் தலைமுறைக்கும் மாபெரும் புண்ணியத்தைச் சேர்க்கும். வாருங்கள், உயிர்களைக் காக்கும் இந்தப் புண்ணியக் காரியத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்!

வடலூரின் ஐந்து புண்ணியத் தலங்கள்

1. மருதூர்

திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் பிறந்த திருத்தலம்.

2. கருங்குழி

வள்ளல் பெருமான் ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்த புண்ணிய தலம். ஆன்மீகப் புரட்சியின் உன்னதப் படைப்பான "அருட்பெருஞ்ஜோதி அகவல்" அருளப்பட்ட முக்கிய இடம். மேலும், "தண்ணீரில் விளக்கெரித்த" அற்புத நிகழ்வு அரங்கேறியதும், சன்மார்க்கச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டதுமான வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலம் இதுவேயாகும்.

3. சத்திய தர்மசாலை

1867 முதல் இடைவிடாது ஏழைகளின் பசியாற்றும் தருமச்சாலை; ஜீவகாருண்யமே உண்மை வழிபாடு என உணர்த்திய தலம்.

4. சத்திய ஞான சபை

சாதி, மத, சமயம் கடந்து உருவமற்ற அருட்பெருஞ்ஜோதியை வழிபடும் ஜோதித் தலம்.

5. சித்தி வளாகம் (மேட்டுக்குப்பம்)

1874-ல் வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு எய்தி சித்தி பெற்ற புனிதத் தலம்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர்அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம்எனநான் தெரிந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன் சிந்தைமிக விழைந்த தாலோ.

— திருவருட்பா, வள்ளலார்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்த டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தின் நோக்கம் என்ன?+

வடலூரைப் புனித நகரமாக மாற்ற விரும்பும் பல்லாயிரக்கணக்கான வள்ளலார் அன்பர்களின் குரலை ஒன்றாகத் திரட்டி, அந்த ஆதரவு ஆவணத்துடன் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் அதிகாரப்பூர்வ கோரிக்கை மனுவைச் சமர்ப்பிப்பதே இதன் நோக்கம்.

15 கி.மீ சுற்றளவு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?+

வள்ளல் பெருமான் அவதரித்த மருதூர், ஆன்மீகப் புரட்சியின் உன்னதப் படைப்பான அருட்பெருஞ்ஜோதி அகவல் அருளப்பட்டு, தண்ணீரில் விளக்கெரித்த அற்புதங்கள் நிகழ்ந்த கருங்குழி, மற்றும் அவர் சித்தியடைந்த மேட்டுக்குப்பம் ஆகிய அனைத்துப் புனிதத் திருத்தலங்களும் வடலூர் சத்திய ஞான சபையிலிருந்து இந்த 15 கி.மீ தொலைவிற்குள்ளேயே அமைந்துள்ளன. இந்த ஒட்டுமொத்தப் புனிதப் பகுதியையும் கருணைச் சிதைவுகளிலிருந்து (அசைவம் மற்றும் மதுவினால் ஏற்படும் சீரழிவுகளிலிருந்து) பாதுகாப்பதே எங்களின் முதன்மை நோக்கமாகும்.

நான் எப்படி இதில் பங்களிக்க முடியும்?+

இந்த இணையதளத்தில் உங்கள் டிஜிட்டல் கையெழுத்தைப் பதிவு செய்து, இந்த இணைப்பை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மற்றவர்களையும் கையெழுத்திடச் செய்யலாம்.